இனவழித் தேசியமா? மொழிவழித் தேசியமா?


மொழிவழி தேசிய இனம் என்ற மெய்மையைவிட்டு இன வழியில் அணி சேர்த்து பெரியார் போராடியது அறிவியலுக்கும் நடைமுறைக்கும் பொருந்தாத தவறான அணுகுமுறையாகும் என்று அடுத்த குற்றச்சாட்டை வைக்கிறார் குணா.
உலகச் சிந்தனையாளரான பெரியார் இந்தியா அளவிலே ஆரிய திராவிடப் போரைத் தொடங்கியிருப்பார். ஆனால், அதற்குரிய உணர்வு இந்தியாவெங்கணும் ஊட்டப்படாமலும், நீர்த்தும் கிடந்தது. குறிப்பாகத் தமிழகம், மராட்டியம் நீங்கலாய் மற்ற பகுதிகளில் ஆரிய ஆதிக்க எதிர்ப்புணர்வு அவ்வளவாக இல்லை. மேலும் வடஇந்தியப் பகுதியில் மொழியால் அவர்கள் மாறிப் போனதால் ஆரியர் திராவிடர் என்ற உணர்வு அவர்கள் பெறுவதில் பெருந் தடையிருந்தது. மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே ஊட்டிய உணர்வை மற்ற இடங்களில் ஊட்ட ஆள் இல்லை.
எனவே, ஒரு மொழிக் குடும்ப உறுப்பினர்களை மட்டுமாவது (தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசுகின்றவர்களையாவது) ஒன்று சேர்த்து ஆரியத்திற்கு எதிரான போர் நிகழ்த்த முடிவு செய்தார். மொழிவழி தேசிய இனம் என்று ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை அவரே விளக்கி விட்டார். தமிழ்மொழி என்றால் பார்ப்பனர்களும் சேர்ந்து கொள்வர். அப்படியாயின் ஒழிக்கப்பட வேண்டிய ஆதிக்கவாதியை உடன் சேர்த்துக் கொண்ட தத்துவ தவறு நிகழும், தடம் புரண்டு இலக்கு தவறும்  மாறும் என்பதாலே இனவழி அணி அமைத்தார்.
இந்தியாவில் சீர்திருத்தம் காண முற்படும் எவரும், உலக வரலாற்று நிகழ்வுகளை உதாரணமாகக் கொண்டு அல்லது முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட முனைவது அறியாமை ஆகும். காரணம், இந்தியாவில் காணப்படும் சிக்கல் தனித்தன்மை வாய்ந்தது. இந்தியாவில் உள்ளது போன்ற ஜாதி ஆதிக்கம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. உலகின் மற்ற இடங்களில் மொழி அடிப்படையில் மக்களை இனம் பிரிக்க இயலும். ஆனால், இந்தியாவில் ஒரே இனத்தவர் பல மொழி பேசும் நிலையில் மொழியைக் கையில் எடுத்தால் இனம் அடிபட்டுப் போகும். அறிவியல் அணுகுமுறை என்பது சூழலுக்கும் இடத்திற்கும் ஏற்ப கொள்ளப்படுவதே தவிர, மேலை நாட்டு விதியை அப்படியே ஏற்று நடப்பதல்ல.
பெரியார் இயக்கம் தொடங்கியபோது இருந்த கேடு, ஆரியப் பார்ப்பன ஆதிக்கம். தமிழன் வாழ்வு, வளர்ச்சி, பண்பாடு, கலை, கல்வி, வேலை, வருவாய் என்று பலவும் அவர்களால் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் விலங்கினும் கீழாய் உழன்ற நிலை. அப்படிப்பட்ட நிலையிலிருந்து தமிழர்களை மீட்க அப்போதைய உடனடி தேவை, ஆரிய ஆதிக்கத்திலிருந்த தமிழர்களை (திராவிடர்களை) மீட்பதே. எனவேதான் பெரியார் அதைக் கையில் எடுத்தார்.
அப்படி கையில் எடுத்தமைக்காக அவரே பல கோணங்களில் காரணங்களைக் கூறுகிறார்.
திராவிட நாடு என்பது சென்னை மாகாணமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமே என்று 1939இல் பெரியார் விளக்குகிறார்.
நான் முன்னமே சுட்டிக்காட்டியதுபோல்,
1944இல், திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றம் அடையவும், பாதுகாப்பதற்கும், திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர்ப்பார்வையின்கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.
ஆனால் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டவுடன் திராவிட நாடு என்ற ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை நீங்கலான தமிழ்நாட்டை மட்டுமே தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வருகிறார்.
ஆந்திரா பிரிந்ததிலிருந்தே, கன்னடமும், மலையாளமும் சீக்கிரம் பிரிந்தால் தேவலாம் என்று எனக்குத் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால்,
1.      கன்னடியனுக்கும், மலையாளிக்கும் திராவிட இனப் பற்றோ, சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றிய இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத, மூடநம்பிக்கையில் ஊறி விட்டார்கள்.
2.      அவர்கள் இருவருக்கும், மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் சிறிதும் கவலையில்லை. இந்தப் பிரிவினை முடிந்து, தமிழ்நாடு தனிநாடாக ஆகி விட்டால், நமது சமுதாய, சமய சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், அப்படியே இருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும் இருக்காது என்று கருதுகிறேன்.
அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை, என்றாலும் திராவிடன் என்ற சொல்லை மட்டும் விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல், பார்ப்பான் (ஆரியன்) வந்து நானும் தமிழன்தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்துவிடுகிறான். என்று 12.10.1955 அன்று பெரியார் ஓர் அறிக்கை விடுகிறார்.
இதைவிட அவரது தமிழ்ப் பற்றிற்கும், தமிழர் பற்றிற்கும், தமிழ்த் தேசிய பற்றிற்கும் வேறு என்ன சான்று வேண்டும். இதை எல்லாம் எதையும் கருத்தில் கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று குற்றச்சாட்டுகளைக் கூறுவது கூறுவோரின் தரமின்மையையே காட்டும். மிகச் சிறந்த ஆய்வாளர் எஸ். வி. இராசதுரை அவர்கள், இந்தியா முழுவதிலும் வடஇந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் மேலாட்சியை உறுதிபடுத்திக் கொண்டுவிட்டதைக் கண்ட பெரியார், அந்த மேலாட்சியிலிருந்து தான் வாழ்ந்த, தனது இயக்கம் கொடி விரித்த, அதன் நிழல்பட்ட நிலப்பகுதியையாவது (தமிழ்நாட்டையாவது) விடுவிக்க முடியுமா என்றுதான் முயற்சி செய்து பார்த்தார்.
தனித் தமிழ்நாடு கோரிக்கையும், திராவிடநாடு கோரிக்கையும் பெரியார் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியபின், தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்டிருந்த பல்வேறு சக்திகளும், நீரோட்டங்களும், சுயமரியாதை இயக்கத்துடன் வந்து சேர்ந்து சங்கமித்ததன் காரணமாக உருவானதுதான். அந்த வரலாற்று சூழலிணைவில் தான் தமிழ்த் தேசியம் என்பது முதன்முதலாக உருவாகியது. தனித் தமிழ்நாடு கோரிக்கையும் முளைவிட்டது. எனினும் மொழியடிப்படையிலான தேசியம் என்பது தன்னளவில் மனிதர்களின் விடுதலைக்கான கூறுகளைக் கொண்டிருக்காது என்று பெரியார் கருதினார்... என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின் எதிரி என்கிறவர்கள் இதை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல, பெரியார், மொழி அடிப்படையிலான தேசியம் தன்னளவில் மனிதர்களை விடுவிக்காது என்று உறுதியாய் நம்பியதன் காரணம் என்ன?
மொழியால் மட்டும் மக்களைப் பிரித்துவிட்டு, பண்பாட்டில், கலையில், கலாச்சாரத்தில், விழாக்களில், மரபுகளில், ஆண்டுக் கணக்கீட்டில், கல்வியில், உத்தியோகத்தில் மீட்சியில்லாமல் ஆரியத்திற்கு அடிமையாயும், ஆரியப் பண்பாட்டுக் கலாச்சார பிடியிலும், மூடநம்பிக்கையின் முடைநாற்றத்திலும் அமிழ்ந்து கிடந்தால் அது விடுதலையா? உண்மையான விடுதலை என்பது இவற்றில்தானே உள்ளது.
எனவேதான் பெரியார், ஆரிய ஆதிக்க எதிர்ப்பைத் தமிழர் மீட்சிக்கான வழியாக எடுத்தார். அதனால்தான் வீழ்ந்து கிடந்த தமிழினம் விழித்தது, எழுந்தது, உயர்ந்தது. இன்னும் முழுமையாக நம்மை நாம் மீட்க ஆரியம் தன் எதிர்ப்பைக் காட்டியே வருகிறது. தமிழாண்டை மீட்டால்மீண்டும் ஆரியம் அதைத் தகர்த்துத் தன் கலாச்சார திணிப்பையே நிகழ்த்துகிறது. இந்த யதார்த்த நிலைகளைப் புறந்தள்ளிவிட்டு, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒரு மாபெரும்இனத் தலைவர்மீது இழிவு சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
பெரியாரின் கொள்கை முடிவையே அன்றைக்கு இருந்த தமிழறிஞர்களும் கொண்டிருந்தனர். குறிப்பாக குணா ஏற்றிப் போற்றும் தேவநேயப் பாவாணரும் கொண்டிருந்தார்.
04.12.1938 அன்று காரைக்குடியில் நடந்த இராமநாதபுர மாவட்ட இரண்டாவது தமிழ் மாநாட்டில், அம்மாநாட்டின் தொண்டர் படைத் தலைவராய் இருந்தவர் தேவநேயப் பாவாணர். அம்மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் சோமசுந்தர பாரதியார். அம்மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் கா.சு.பிள்ளை அவர்கள், தமிழர்களின் பெருமை, ஆரியர் வருகையால் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியன பற்றி அய்ரோப்பிய அறிஞர் ஜில்பர்ட் ஸ்லேட்டர் கூறியதைத் தொகுத்துக் கூறித் தனித் தமிழ் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தினார் - (குடிஅரசு 02.01.1938)
மேற்படி மாநாட்டை நடத்துவதற்குத் திருச்சியில் கூடிய கலந்துரையாடல் கூட்டத்திற்கு உமா மகேஸ்வரன் பிள்ளை தலைமை தாங்கினார். கருமுத்து தியாகராச செட்டியார், பண்டிதர் மீனாட்சிசுந்தரம், பண்டிதமணி கதிரேச செட்டியார், டாக்டர் சொக்கலிங்கம், பரிமளா பல்லவராயன், நா.மு. வேங்கடசாமி நாட்டார், அண்ணா, குஞ்சிதம், தேவநேயப் பாவாணர், திருப்பூர் சென்னியம்மாள் போன்றோர் கலந்து கொண்டனர்           - குடிஅரசு, 07.11.1937
அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.தமிழ்க் கலையையும், தமிழர்களையும் பாதுகாக்க தமிழர் சங்கம் அமைப்பது.
2.
தமிழ் வளர்ச்சிக்குத் தனிப் பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும்.           
3.வார்தா கல்வித் திட்டம் கல்வி வளர்ச்சிக்குப் பயனற்றது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆக, எந்தவொரு விடுதலையும் கலை, பண்பாடு, மொழி, கல்வி, வேலை வாய்ப்பு, சமயம், கருத்து, விருப்பு போன்றவற்றின் விடுதலையை உள்ளடக்கியே இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்களும், தமிழர் தலைவர்களும் கூறினர் என்பது இதன்வழி புலப்படுவதோடு, பெரியார் கருத்தையே இவர்களும் ஏற்றனர் என்பது தெளிவாகிறது.
மொழியின் அடிப்படையில் தமிழர் ஒற்றுமை காண வேண்டும். இன அடிப்படையில் அணி திரட்டியது தவறு என்போருக்கு, பெரியாரின் கீழ்க்கண்ட பேச்சே பதில் அளிக்கிறது.
தமிழும், தமிழ்நாடும், தமிழ்மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கின்ற காரணத்தால், ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிடக் கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும், மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே தவிர இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.
ஆரியர்கள் முதலில் நம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துதான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக  அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக  சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.
எனவே, ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. கலாச்சாரத்தின்பேரால் இனத்தின்பேரால் போராட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம்.
மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது.
சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், அதற்குக் காரணமான கலாச்சாரமும் ஒழிந்துவிட மாட்டா. மேலும் இந்த இழிவால் பாதிக்கப்படக் கூடியவர்கள் தமிழ்மொழி பேசுகிறவர்கள்  தமிழர்கள் என்பவர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும், அதாவது வேறு பல மொழி பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராட்டிரம் முதலிய மாகாணங்களிலும் உள்ளனர். அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே கூறிக் கொள்கின்றனர். உண்மையில் அவர்களும் திராவிடர்கள்தாம்.
இவர்கள் அனைவரும் இன்றில்லையானாலும், நாளை நிச்சயம் ஆரியத்தை எதிர்க்க  அதற்காகப் புரட்சி செய்ய ஒன்றுபடப்போவது நிச்சயம். எனவேதான், நாம் பல எதிர்ப்புக் கிடையேயும், திராவிடர் கழகம் என்ற பெயரால் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
- (24.01.1950 பெரியார் சொற்பொழிவு, விடுதலை இதழ் 27.01.1950).
எனவே, திராவிடம் என்பதை பெரியார் கையில் எடுத்தது ஆரியர்களுக்கு எதிராகத்தானே தவிர, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு ஆதரவாக அல்ல என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டும்.
இப்படி பரந்துபட்ட இந்தியா அளவில் ஆரியர்களுக்கு எதிரான ஒரு பெரும் புரட்சியைத் திராவிடர் இனம் என்ற அடிப்படையில் தொடங்க வேண்டும் அல்லது புரட்சி வர வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனைதிட்டம் பெரியாருக்கு. இருப்பினும் அவரைப் பொறுத்தவரைத் திராவிட நாடு என்பது என்ன என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், 1961ஆம் ஆண்டே தமிழ்நாடா? திராவிட நாடா? என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதி வெளியிட்டார்கள்.
நாடு பிரிய வேண்டும் என்ற கருத்தை முதன் முதல் 1937இல் ஆச்சாரியார் (இராஜாஜி) மந்திரிசபை அமைத்து இந்தியைக் கட்டாய பாடமாக்கித் திணித்த நிலையில்தான் தந்தை பெரியார் அவர்கள், இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா? என்ற குரல் எழுப்பி, தமிழ்நாடு தமிழருக்கே என்ற இலட்சிய முழக்கத்தை எழுப்பினார்.
அப்போது தமிழ்நாடு, இன்றைக்கு இருப்பதுபோல் தனித்த (ஒரு சிறு மலையாளப் பகுதி, ஒரு சிறு ஆந்திரப் பகுதி, ஒரு சிறு கன்னடப் பகுதி நீங்கலான) நாடாக இல்லை. அப்போது தமிழ்நாடு டில்லி ஆதிக்கத்திலும் இல்லாமல் பிரிய வேண்டும் என்று சொன்னது அன்றைய சென்னை இராஜதானியைத்தான் (Madras peridency)
தமிழ்நாடு தமிழருக்கே! என்று முழக்கம் எழுப்பியபோது,
சென்னை இராஜதானியில் உள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களும் ஆகிய எங்கள் நிலை என்னாவது என்று கேட்டதால்தான் உடனே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமானது, திராவிட நாடு திராவிடர்க்கே! என்று மாறியது.
திராவிடநாடு பிரிய வேண்டும் என்ற தீர்மானம், தீர்மான வடிவில் முதன்முதலில் நிறைவேற்றப்பட்டது 1940இல் (04.08.1940) திருவாரூரில் பெரியார் .வெ.ரா. அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமை சங்க மாநாட்டில்!
தீர்மானம் வாசகம் இதோ:
திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றம் அடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்பார்வையின்கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இத்தீர்மானத்தின் வாசகங்களில் முக்கியமான வாசகங்கள் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் என்பதே ஆகும்.
காரணம், திராவிட நாடு எது? என்ற கேள்விக்குப் பதிலாக அது அமைந்ததோடு, சென்னை மாகாணம்தான் பெரியார் அவர்கள் கோரிய திராவிட நாடு என்பதாகும்.
இது அந்த மாநாட்டில் மட்டுமல்லாமல் அதன் பிறகு 27.08.1944இல் பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டது.
தீர்மானம்  2 :
அதன் முக்கிய கொள்கைகளில், திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க ஆதிக்கம் இல்லாததும் நேரடி பிரிட்டிஷ் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கையை முதற்கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
இத்தீர்மான வாசகங்களில் தந்தை பெரியார் கோரி வந்த திராவிட நாடு சென்னை மாகாணம்தான் என்பது தெரியவில்லையா?
1945இல் திருச்சி புத்தூர் மைதானத்தில் பெரியார் தலைமையில் கூடிய திராவிடர் கழக மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட- 1. திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூர்ண சுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும் என்ற தீர்மானத்திலும் திராவிட நாடு என்பது சென்னை மாகாணம் என்று அடைப்புக்குள் விளக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு திராவிட நாடு கேட்டபோது, மைசூர் இராஜ்யத்தையோ, திருவாங்கூர், கொச்சி இராஜியங்களையோ, அய்தராபாத் இராஜ்யத்தையோ கொண்டதாக ஒருபோதும் கேட்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிய வேண்டும்.
இதன்பின் 1953இல் தெலுங்கர்கள் நாச வேலைகளில் ஈடுபட்டு ஆந்திராவைப் பிரித்து டில்லியின் கீழ் உள்ள ஒரு பெரிய புது இராஜ்யமாக்கிக் கொண்டனர்.
1,27,780 சதுர மைல் கொண்ட சென்னை மாகாணம் ஆந்திரா பிரிந்ததால் 60,362 சதுர மைல் பரப்பளவு உள்ளதாகக் குறுகியது.
1956இல் நவம்பர் 1ஆம் தேதி முதல் மொழிவழி மாநில குழுவினரின் சிபாரிசுகளை (states Recorganisation Commission) ஏற்று எல்லா நாடுகளின் எல்லையையும் மாற்றித் தீட்டியது அரசாங்கம். அதன்படி சென்னை இராஜ்யத்தில் இருந்த தென்கன்னட மாவட்டம் கன்னட மாநிலத்துடனும் (மைசூர் மாநிலத்துடனும்) மலபார் மாவட்டம் திருவாங்கூர் நாட்டுடனும் சென்றது. அதன்பின் பழைய திருவாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் இவற்றைச் சேர்த்துக் கேரளா மாநிலம் பிறந்தது. ஆந்திரா, அய்ராபாத் இராஜ்யத்துடன் இணைந்து ஆந்திர மாநிலம் பிறந்தது.
மேற்கூறிய மாற்றங்களால் சென்னை இராஜ்யத்தின் பரப்பளவு 50,113 சதுர மைல்களாகவும், மக்கள் தொகை 3 கோடியாகவும் குறைந்தது. இதுதான் இன்றைய சென்னை இராஜ்யம். இது இன்றைய தமிழ்நாடு. அதன் காரணமாகவே பெயரளவில் 4 மொழி நாடாக இருந்தது மாறி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால் இதைத் தமிழ்நாடு என்று அழைப்பதில் எவ்வளவு பெருமை கொள்கிறோமோ அவ்வளவு பெருமையுடன் சென்னை மாகாணம்  தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும்; டில்லி ஆதிக்க ஆட்சியினின்றும் பிரிக்கப்பட வேண்டும்.
உண்மை வரலாறு இப்படி இருக்க, தந்தை பெரியார் திராவிடநாடு கோரி, தமிழர்களைக் கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும் அடிமைப்படுத்தி விட்டார். தமிழர்கள் வீழ்ந்தார்கள்! என்பது ஆரியத்திற்குத் துணைசெய்யும் அயோக்கியப் பிரச்சாரமாகும்.
சென்னை மாகாணப் பகுதிக்கு அப்பால் இருந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் திராவிடத்தை  ஏற்காதது நன்கு தெரிந்தும் பெரியார் திராவிடத்தைப் பிடித்துக் கொண்டு நின்றது, தமிழ்த் தேசியம் உருவாகாமல் தடுக்க கன்னடரான பெரியார் எண்ணியதாலே என்று அயோக்கியத்தனமாகக் குற்றஞ்சாட்டுகிறார் குணா.
இதற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமே இல்லாமல், பெரியார் கூறியதிலே பதில் உள்ளது பாருங்கள்.
பொதுவாக ஆந்திரா பிரிந்து போனதிலிருந்தே கன்னடமும், மலையாளமும் (கீழ்க்கண்ட) இரண்டு மூன்று காரணங்களால் சீக்கிரம் பிரிந்து போனால் தேவலாம் (நல்லது) என்கிற எண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது.
ஒன்று : கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றிய இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.
இரண்டு : அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.
ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.
மூன்று : இவர்கள் இருநாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் இரண்டே மாவட்டக் காரர்களாவார்கள்.
1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வடாற்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. இராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை, 12. தென்னாற்காடு, 13.தென் கன்னடம், 14. மலபார்.
அப்படி (14இல்) 7இல் ஒரு பங்குதாரர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம்உத்தியோகம் முதலியவைகளில் 3இல் 2 பங்கை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனிநாடு ஆகிவிட்டால், நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும் ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன்.
நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கு இருக்கும் சகிக்க முடியாத குறை என்னவென்றால், நாட்டினுடைய, மொழியினுடைய பெயர் அடியோடு மறைக்கப் பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரந்தான். நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர் தமிழ் அல்ல என்பதாலும், நமக்கு (தமிழர்க்கு) ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்ற வேதனைதான். ஆனால் இந்தப் பிரிவினை வந்தால், (கன்னடர், தெலுங்கர்மலையாளி யையும் நம்மோடு சேர்த்துக் குறிக்கும்) திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழினத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இயலாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன்தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.
திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு, ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போனபின்புகூட, மீதியுள்ள யாருடைய எதிர்ப்பிற்கும் வழியில்லாத தமிழகப் பகுதிக்கு தமிழ்நாடு என்று பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும் (ஆரியனும்) வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் கொடுமை! எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன்.
இதைத் திருத்த (மாற்ற) தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் மேல் சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், நானோ, என் கழகத்தவரோ, என்னைப் பின்பற்றுகிறவர்களோ எதற்காக வாழ வேண்டும்?...
தமிழ்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறந்து விடுவதென்றால், பிறந்து தமிழன் எதற்கு உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை! எனவே, இக்கேடு முளையிலேயே கிள்ளி எறியப்பட முயற்சி செய்யும்படி எல்லா தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்!
- (12.10.1955 ல் பெரியார் வெளியிட்ட அறிக்கை)
இதன்பின் பெரியாரின் இந்த வேண்டுகோள் திராவிடர் கழகத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.
இப்படி தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் கெஞ்சிக் கையேந்தியும், மிஞ்சி கொதித்தெழுந்தும், தமிழையும், தமிழரையும் காக்க முடியாமல் நாம் எதற்கு வாழ வேண்டும்? என்று உணர்ச்சிகளை வெளியிட்ட உண்மையான ஒரு தமிழர் தலைவரை இந்தக் குணாக்கள் கொச்சைப்படுத்துகிறார்கள், குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், இவர்களை முச்சந்தியில் நிறுத்தி முறைசெய்ய வேண்டும்!


நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!