திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!


சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கானது அல்ல. சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கானது அல்ல. சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கானது அல்ல.
சுயமரியாதை என்பது உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒட்டுமொத்த மாந்தருக்கானது.
ஆகவே, தந்தை பெரியார் உலகத் தலைவராகிறார். சுயமரியாதை என்கிற கோட்பாட்டை முன்மொழிந்ததால், சுயமரியாதை என்கிற கோட்பாட்டை பரப்பியதால், தந்தை பெரியார் உலகத் தலைவராகிறார்.
உலகம் முழுவதும் வாழுகிற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும்.

சுயமரியாதை என்றால் என்ன?

பிறர்  நம்மை அவமதிக்கின்ற பொழுது, நமக்கு எழுகின்ற கோபம்தான் சுயமரியாதையா? என்றால், இல்லை.
தாழ்வெண்ணத்தை அகற்ற வந்த ஒரு போராளிதான் புரட்சியாளர், உலகத் தலைவர் பெரியார்
பிறர் நம்மை இழிவு செய்கின்றபொழுது, நமக்கு எழுகின்ற ஆத்திரம் மட்டும்தான் சுயமரியாதையா? என்றால், இல்லை.
சுயமரியாதை என்பது நமக்குள் நம்மை அறியாமல் மண்டிக்கிடக்கின்ற தாழ்வெண்ணத்தைத் தூக்கி எறிதல். தாழ்வு மனப்பான்மையை சிதற வைப்பது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஆழ்ந்து கிடக்கின்ற, மண்டிக் கிடக்கின்ற, ஊறிக் கிடக்கின்ற தாழ்வெண்ணத்தை அகற்ற வந்த ஒரு போராளிதான் புரட்சியாளர், உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
நீ மனிதன், உனக்கென்று ஒரு சுயமரியாதை தேவை. தன் மதிப்பு - தன்னை மதிக்கிறவன் - பிறரை மதிக்க நாம் கற்றுக் கொண்டிருக்கின்றோம். பெரியவர்கள் வந்தால், நாம் எழுந்து நிற்கிறோம். நம்மைவிட மூத்தவர்கள் வந்தால், மதிப்பு கொடுக் கின்றோம். படித்தவர்கள் என்பதற்காக மதிப்பு கொடுக்கிறோம். பிறரை மதிக்கக் கற்றிருக்கிறோம். ஆனால், நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். தன் மதிப்பில்லாதவன்தான் அடிமையாக உழலுகிறான். தன் மதிப்பில்லாதவன்தான் சுயமாய் சிந்திக்க மறுக்கிறான்; தன் மதிப்பில்லாதவன்தான் மூடநம்பிக்கைகளை ஏற்கிறான்; ஆதிக்கத்தை அனுமதிக்கிறான்; அடிமைக் கலாச் சாரத்தை விரும்புகிறான்.
ஆகவே, தன்னை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஒரு மகத்தான கோட்பாடுதான் சுயமரியாதைக் கோட்பாடு.
இதை ஒரு கோட்பாடாக வரையறுத்து அதனை ஒரு மாபெரும் இயக்கமாக  முன்னெடுத்துச் சென்ற பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.
ஆகவே, பெரியாரியம் என்பதுதான் திராவிடம் என்கிற கோட்பாடு. இந்தக் கோட்பாட்டைச் சொன்னதால், நாம் எங்கே வீழ்ந்தோம்? பகுத்தறிவோடு வாழ் என்று சொன்னால், எப்படி ஒரு மனிதன் வீழ்ச்சியடை முடியும்.
உன்னை நீயே மதிக்கக் கற்றுக்கொள் என்றால், எப்படி ஒரு மனிதன் வீழ்ச்சி அடைய முடியும்?
அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டியது பெரியாரின் தொண்டர்களின் கடமை
நீ இந்த சமூகத்தில் போராடவேண்டுமானால், உனக்கான சமூகநீதி தேவை - அந்த சமூகநீதியைப் பெறுவதற்கு நீ போராடு என்று சொன்னால், எப்படி ஒரு மனிதன் வீழ்ச்சி யடைவான்.
சமூகநீதியால் எப்படி வீழ்ந்து போவோம்?
ஜாதி ஒழிப்பால் எப்படி வீழ்ந்து போவோம்?
பெண்கள் கல்வி பெறவேண்டும் என்றால் எப்படி வீழ்ந்து போவோம்?
பெண்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்றால் எப்படி வீழ்ந்து போவோம்?
இவர்கள் தேர்தல் அரசியலை மட்டுமே கவனத்தில் கொண்டு, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தவறான புரிதலைப் பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டியது பெரியார் தொண்டர்களின் கடமை; பெரியார் பெருந்தொண்டர்களின் கடமை.

துணிவைத் தந்தது பெரியாரியம்!

திராவிடம் என்பது முற்றிலும் பெரியாரியத்தோடு தொடர் புடையது. அப்படித்தான் நாம் இதனைப் பார்க்கவேண்டும்.
தேர்தல் அரசியல் கட்சிகளோடு இணைத்துப் பார்ப்பது என்பது வேறு. திராவிடம் என்கிற பெரியார் இயக்கக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வது என்பது வேறு.
இன்றைக்கு நான் வெள்ளைச் சட்டை போட்டு வெளியில் நிமிர்ந்து நடக்க முடிகிறது என்று சொன்னால், அதற்கான துணிவைத் தந்தது பெரியாரியம்.
ஜாதி இறுக்கத்தில் ஒரு மாபெரும் தளர்வை ஏற்படுத்தி, அந்த இறுக்கத்தைத் தகர்த்து, அங்கே மனிதநேயத்தை வளர்த்தது பெரியாரியம்.

 பாஞ்சாலம் கிராமத்தில் ஒரு நிகழ்வு!

அதற்கு ஒரு சான்று - மேடையில் நம்முடைய ஆசிரியர் அவர்களை வந்து சந்தித்த தம்பி பெருமாள் பாஞ்சாலம் கிராமத்தைச் சார்ந்தவர். அவருடைய துணைவியாரோடு வந்து சந்தித்தார்; புத்தகம் பெற்றுக் கொண்டார்.
எனக்கு எதிரான அவதூறுகள் பரப்பப்பட்டபொழுது, மிகத் தீவிரமாக உச்சநிலையில் இருந்தபொழுது, அந்தப் பாஞ்சாலம் கிராமத்திற்குப் பெருமாள் தன்னுடைய வீட்டிற்கு என்னை அழைத்தார். முழுக்க தலித் அல்லாதவர்கள் வசிக்கின்ற பகுதி அது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால், வன்னிய சமூக மக்கள் வாழுகின்ற பகுதி. நான் சற்று தயங்கினேன்.
தம்பி, உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. நீங்கள் பெரியார் தொண்டர். உங்களுடைய அழைப்பை ஏற்று நான் ஊருக்கு வர, எனக்கு விருப்பம்தான். ஆனால், வேண்டாதவர்கள் ஏதாவது வம்பிழுத்தால், தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும். வேண்டாம் என்று நான் சொன்னேன்.

இவ்வளவு பெரிய உணர்வை பெரியாரியம்தான் ஏற்படுத்தியது!

அப்படி நீங்கள் எண்ணவேண்டாம் அண்ணா. ஒட்டு மொத்த கிராமமும் திராவிடர் கழகம் பெரும்பான்மையாக உள்ள கிராமம். நீங்கள் வாருங்கள் வந்து பாருங்கள், எப்படி அந்தப் பகுதி இருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள் வீர்கள் என்று - விடுதலை சிறுத்தைகளும், அந்தத் தம்பி குடும்பமும் என்னை அழைத்துப் போனபோது, நான் வியந் தேன். ஒட்டுமொத்த கிராமமும் எனக்கு மிகப்பெரிய வரவேற் பினை தந்தது. வீட்டிற்கு வீடு அழைத்துப் போனார்கள். வழியெங்கும் வரவேற்புப் பதாகைகள். இவ்வளவு பெரிய உணர்வை ஏற்படுத்தியது எது? பெரியாரியம்தான் ஏற்படுத் தியது.
இவ்வளவு பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எது - பெரியாரியம்தான். பெரியாருடைய தொண்டர்கள் அந்த கிராமத்தில் இருப்பதால்தான், ஜாதியை தூக்கி தூரயெறிந்து விட்டு, திருமாவளவனை சகோதரனாக அரவணைத்துக் கொண்டார்கள்.
நான் இப்பொழுது அந்த வழியே போகிறேன் என்று தகவல் கிடைத்தாலே, பாஞ்சாலம் பெருமாள் வீட்டிலிருந்து தான் எனக்கு சாப்பாடு வருகிறது. நான் சொல்வதில்லை. ஒரு உதாரணத்திற்காக, எடுத்துக்காட்டிற்காக இதனைச் சொல்கிறேன்.

மாற்றத்தை ஏற்படுத்தியது தந்தை பெரியார்!

இன்னொரு வியப்பான ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
அவர் எப்பொழுதும் கருப்புச் சட்டை அணிந்த திராவிடர் கழகத் தொண்டர்தான். ஆனால், தாம் பெற்ற பிள்ளைக்கு திருமாவளவன் என்று பெயர் சூட்டியிருக்கிறார். எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது திருமாவளவன் அல்ல; இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது தந்தை பெரியார் என்பதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
எப்படி திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்ல முடியும்? எவ்வளவு பெரிய மாற்றம் இது. எவ்வளவு பெரிய புரட்சிகரமான மாற்றம் இது.
ஜாதியை சொல்லி அரசியல் ஆதாயம் தேடக்கூடியவர்கள்; ஜாதி வெறுப்பை இங்கே கக்கிக் கொண்டிருக்கின்ற சூழலில், அவதூறைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற சூழலில், எங்கள் கிராமத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து - ஒட்டு மொத்த கிராமத்திலும், என்னுடைய படம் தாங்கிய, ஆசிரியர் படம் தாங்கிய, பெரியார் படம் தாங்கிய, புரட்சியாளர் அம்பேத்கர் படம் தாங்கிய பதாகைகளைப் போட்டு வரவேற்பு அளித்தனர். அதிலும் இரவு வேளையில் சென்றேன்.
சில நேரங்களில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வம்பு இழுக்க வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி, அவ்வளவு சிறப்பான ஒரு வரவேற்பை அந்தக் கிராமத்தில் வழங்கினார்கள். வீட்டிற்கு வீடு அழைத்துச் சென்றார்கள்.
ஆசிரியரிடம் பாஞ்சாலம் என்று சொன்னவுடன், எனக்கு நன்றாகத் தெரியுமே, அந்தக் கிராமத்திலுள்ள எல்லா வீட்டிற்கும் நான் சென்று வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

பெரியார் வடிவத்தில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்!

ஆக, இப்படி தமிழகத்தில் பல கிராமங்கள், பல இடங்களில் திராவிடர் கழகத் தொண்டர்கள், பெரியாரின் பெருந்தொண் டர்கள் - இந்த ஜாதி அமைப்புக்கு எதிரான யுத்தங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் - போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் மறைந்து 43 ஆண்டுகள் ஆகலாம்; ஆனால், அவர் வடிவத்தில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து அந்தப் பயணத்தை மிக வேகமாக, தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை, வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதை நாம் பார்க்கிறோம்.

மனிதனாக்க வேண்டியது கடமை!

ஆனால், அரசியல் சக்தியாக அவனை திரட்டுவதற்கு முன்பு, அவனை மனிதனாக்கவேண்டியது கடமையாக இருக்கிறது. சுயமரியாதை உள்ள ஒரு மனிதனாக, ஆக, சுயமரியாதை என்பது ஒரு கோட்பாடு.
பெரியார் என்றால் எல்லோருக்கும் தெரிந்தது ஏதோ பார்ப்பனர் எதிர்ப்பு - கடவுள் மறுப்பு இந்த இரண்டு மட்டும்தான் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கிறது.
சுயமரியாதை என்கிற கோட்பாட்டிலிருந்துதான் இவை அனைத்தும் பிறக்கின்றன. கடவுளை மறுக்கவேண்டிய தேவை - சுயமரியாதை தேவை என்பதால்.
சுயமரியாதையை எது கெடுக்கிறது; உன் சுயமரியாதையை எது பாதிக்கிறது; உனக்குத் தாழ்வு மனப்பான்மையை எது தந்திருக்கிறது?

பெரியார் பேசுகிறார்!
பெரியார் சொல்கிறார்!

நான் சாதாரணமான மனிதன். நான் சொல்கிற அனைத் தையும் நீ அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உனக்கு நரகம் கிடைக்கும் என்று நான் அச்சுறுத்த மாட்டேன். நான் சொல்வதில் எது சரி என்று உனக்குப் படுகிறதோ, அதை ஏற்றுக்கொள். சிந்தித்துப் பார் என்றுதான் சொல்கிறார்.
இதுதான் பெரியாரியம். ஆக, பெரியாரியத்தால் எப்படி தமிழன் வீழ்ந்து போயிருக்க முடியும்? பெரியாரியத்தால் எப்படி திராவிட நாடு அல்லது இந்தத் தமிழ்நாடு, தமிழக மக்கள் வீழ்ச்சியடைந்திருக்க முடியும்?
இப்படி அவன் பேசுவதற்கான துணிச்சலைத் தந்ததே பெரியாரியம் தான். இப்படியெல்லாம் விமர்சிக்கலாம் என்று அவர்தான் கற்றுக் கொடுத்தார்.
நான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ப தில்லை. என்னை விமர்சனம் செய்வதற்கும் உனக்கு உரிமை உண்டு என்று சொல்கிற அந்தத் துணிச்சலை, நேர்மையை தந்தை பெரியாரி டத்தில்தான் நாம் பார்த்தோம்.
அனைத்து ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம்
எனவே, பெரியாரியம் என்பது சுயமரியாதைக் கோட்பாடு. சுயமரி யாதைக் கோட்பாட்டை நாம் உள்வாங்கிக் கொண்டால், அதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவு என்பது அறிவியல் பார்வை யோடு தொடர் புடையது. அந்த அறிவியல் பார்வையோடு தொடர்புடைய கோட் பாட்டைப் பரப்புகிறபொழுது, ஆதிக்கத்தை எதிர்க்கவேண்டி இருக்கிறது. அது ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால் நிகழ்கிற அனைத்து ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம்.
ஆணாதிக்க எதிர்ப்பு என்பது பெண் விடுதலைக்கானது. பார்ப்பன எதிர்ப்பு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடு தலைக்கானது.
ஆக, ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம்; வேறு காரணம் இல்லை. ஆதிக்கத்தை எதிர்க்கின்ற அரசியலில் ஜாதி ஒழிப்பும் அடங்குகிறது; சமூகநீதியும் அடங்குகிறது.
சமூகநீதி என்பது என்ன? பங்கீடு. அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வது. அதிகாரம் என்பது ஒட்டுமொத்த மக்களின் உழைப்பால் விளைந்த ஒரு சொத்து. அதிகாரமும் ஒரு சொத்துதான். அதனை ஒரு குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே நுகர்கிறார்கள்; பயன் பெறுகிறார்கள். அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமானால்
எனவே, அதிகாரத்தைப் பரவலாக்கவேண்டும். அதிகாரம் என்பது- ஆட்சி அதிகாரமாகவும் இருக்கிறது
நிர்வாக அதிகாரமாகவும் இருக்கிறது
குடும்ப அதிகாரமாகவும் இருக்கிறது
கட்சி அதிகாரமாகவும் இருக்கிறது
பொருளியல் அதிகாரமாகவும் இருக்கிறது.
இப்படி பல வகைகளில் அதிகாரம் வடிவங்களைப் பெற்று இருக் கிறது. ஆக, இந்த அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு அடிப்படையில், கல்வி வேண்டும்; கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும்.
பெருமை - தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் சாரும்!
ஏனென்றால், கல்வியை ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே படிக்கின்ற நிலை இருந்தது. எனவே, இவர்கள் எல்லாம் படிக்கவேண்டுமானால், அவரவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் உரிய பங்கீட்டைத் தரவேண்டும். எனவே, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அரசியல் அதிகாரத்திலும் இடப் பங்கீடு வேண்டும் என்கிற அந்தக் கருத்தியல் தான், சமூகநீதி என்கிற கருத்தியல்.
அந்த சமூகநீதியை இந்த மண்ணில் நிலை நாட்டச் செய்த பெருமை - தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரை யும் சாரும்.
அந்த மாமனிதர்கள்தான் சமூகநீதிக் காவலர்களாக இந்தக் களத்தில் போராடிய போராளிகள்.
ஒருபோதும் திராவிடத்தால் தமிழன் வீழ்ந்ததில்லை; எப்பொழுதும் வீழமாட்டான்
ஆக, சமூகநீதி வந்தால்தான், ஜாதியையும் ஒழிக்க முடியும். ஜாதி ஒழிப்பு, சமூகநீதி என்கிற இந்தக் கொள்கைகள் அனைத்தும், சுயமரியாதை கோட்பாட்டோடு தொடர்புடையது. பெண் விடுதலை என்கிற கொள்கை - சுயமரியாதைக் கோட்பாட்டோடு தொடர்புடையது.

கடவுள் மறுப்பு என்பது சுயமரியாதைக் கோட்பாட்டோடு தொடர்புடையது

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது சுயமரியாதைக் கோட்பாட்டோடு தொடர்புடையது.
சுயமரியாதை கோட்பாடு என்பதுதான் பெரியாரியக் கோட்பாடு. பெரியாரியக் கோட்பாடுதான் - திராவிடம் என்கிற கோட்பாடு.
எனவே, ஒருபோதும் திராவிடத்தால் தமிழன் வீழ்ந்ததில்லை; எப்பொழுதும் வீழமாட்டான் - அதை அவர்களுக்குப் புரிய வைப்போம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
(24.12.2016 அன்று உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை)

(தொகுப்பு : கவிஞர் கலி.பூங்குன்றன்)



நூல் : திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர் :  கி.வீரமணி  


Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)